தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
திண்டுக்கல்: தன்னிச்சையாக தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் தொகுதி கடந்த 2 தேர்தல்களாக மார்க்சிஸ்ட் வசம் உள்ளது. இத்தொகுதியில் 2001, 2006 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு பாலபாரதி எம்.எல்.ஏவாக உள்ளார். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் அன்பையும், செல்வாக்கையும் பெற்றவர். சட்டசபை சிபிஎம் தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் ராமுத்தேவர் இங்கு அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது, சிபிஎம் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். நகர் முழுவதும் வரையப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னம், ஜெயலலிதா பெயர் ஆகியவற்றை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஜெயலலிதாவைக் கண்டிக்கிறோம் என்று கூறி கோஷமும் இட்டனர். பின்னர் கட்சி நிர்வாகி ஜோதிபாசு என்பவர் கூறுகையில், கடந்த10 வருடங்களாக இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல்லில் மக்கள் பணியாற்றி வருகிறது.
எங்களது விருப்ப தொகுதிப் பட்டியலில் முதல் இடத்தில் திண்டுக்கல்லைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எங்களை மதிக்காமல் தன்னிச்சையாக இங்கு போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது, தாங்கிக் கொள்ள முடியாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராகி விட்டோம் என்றார் அவர்.