ராசா உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்றக் காவல் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லி: வீடியோ கான்பரன்சிங்கில் கோளாறு ஏற்பட்டதையடுத்து 2ஜி ஊழல் வழக்கில் கைதாகியுள்ள ஆ.ராசா உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானர். அவர்களின் நீதிமன்றக் காவல் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பால்வா கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 4 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை சிறையில் இருந்தவாரே வீடியோ கான்பிரன்சிங் மூலம் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றுடன் அவர்களின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கம்போல் வீடியோ கான்பிரன்சிங் மூலம் காவலை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழில் நுட்பக் கோளாறால் வீடியோ கான்பிரன்சிங் முறையை பயன்படுத்த முடியவில்லை.
எனவே, அவர்கள் 4 பேரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேருமே செல்வாக்குள்ளவர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே, அவர்களின் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி 4 பேரின் காவலையும் வரும் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.