அச்சுதானந்தனுக்கு சீட் கன்பர்ம்: கட்சி மேலிடம் முடிவு
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கு தேர்தலில் சீட் இல்லை என்று முடிவு செய்த மார்க்சிஸ்ட் கட்சி தற்போது சீட் கொடுத்து விட்டது.
4 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான அச்சுதானந்தனுக்கு (87) வயது காரணமாக வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க கட்சி மேலிடம் மறுத்தது.
இதையடுத்து அச்சுதானந்தனின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் அவருக்கு சீட் கொடுக்குமாறு கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று தற்போது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
அவர் ஏற்கனவே போட்டியிட்ட பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான பொலிட்பீரோ ஆலோசனைக் கூட்டம் நேற்றும் இன்றும் டெல்லியில் நடந்தது. அதில் அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மாநிலத் தலைமைக்கு உத்தரவிடப்பட்டது.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதும் அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று மாநிலக் குழு கூறியது. குறிப்பாக அச்சுதானந்தனின் எதிர்ப்பாளரான பினரயி விஜயன் அச்சுதானந்தனுக்கு சீட் கொடுக்கவே கூடாது என்றார். ஆனால் கட்சித் தலைமை அவருக்கு சீட் கொடுக்குமாறு மாநிலக் குழுவிடம் பரிந்துரைத்து. தற்போதும் அதேபோன்று தான்.