பிரணாபுக்குப் பதில் அலுவாலியா நிதியமைச்சராக விரும்பியது யு.எஸ்.-விக்கிலீக்ஸ்
டெல்லி: பிரணாப் முகர்ஜிக்குப் பதில் எம்.எஸ்.அலுவாலியா நிதியமைச்சராக வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. ஏன் அலுவாலியா நிதியமைச்சராக நியமிக்கப்படவில்லை, இதற்கு என்ன காரணம் என்று விசாரிக்குமாறு அமெரிக்கத் தூதரகத்தை ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் என்று இந்து நாளிதழ் கூறியுள்ள செய்தி...
பிரணாப் முகர்ஜியை நிதியமைச்சராக நியமிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முடிவு செய்த விஷயம், அமெரிக்காவுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரை தொடர்பு கொண்ட ஹில்லாரி கிளிண்டன், ஏன் முகர்ஜியை நியமிக்கிறார்கள். எம்.எஸ்.அலுவாலியா நியமிக்கப்படாதது ஏன். இதுகுறித்த பின்னணித் தகவல்களை சேகரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரணாப் முகர்ஜி குறித்தும் விரிவாக விசாரித்து தகவல் அனுப்புமாறும் ஹில்லாரி கூறியிருந்தார். முகர்ஜிக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் குறித்தும், அவருடைய பின்னணி என்ன, பட்ஜெட்டில் அவர் அறிவிக்கப்போகும் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் ஹில்லாரி.
பிரணாபுக்குப் பதில் ப.சிதம்பரமோ அல்லது அலுவாலியாவோ நிதியமைச்சராக ஆகியிருந்தால் அமெரிக்காவுக்கு அது சவுகரியமாக இருந்திருக்கும் என்றும் அமெரிக்கத் தூதரிடம் ஹில்லாரி கூறியுள்ளார்.
நாராயணன் நீக்கம் குறித்தும் அமெரிக்கா கவலை
இதேபோல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டது குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. நாராயணன் அவராக விலகவில்லை என்றும், அவர் கட்டாயப்படுத்தி நீக்கப்பட்டதாகவும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோத்தி ரூமர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
நாராயணன், ப.சிதம்பரம் இடையிலான கடும் மோதலே, நாராயணன் வெளியேறக் காரணம் என்று தன்னிடம் மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் கூறியதாக ரூமர் தெரிவித்துள்ளார்.