பிரதமருக்கு எதிராக உரிமைப் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் பெரும் அமளி
டெல்லி: காங்கிரஸ் ஆட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் தனது அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் தவறான தகவல் அளித்தார் என்பதால், அவர் மீது நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா உள்பட எதிர்கட்சிகள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தன.
இதனால் இரு தரப்பினரும் கடுமையான மோதிக் கொண்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
2008-ல் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்லப்பட்டது என விக்கிலீக்ஸ் இணையதளத்தின் செய்தி வெளியானது.
இது தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு பணம் அளிக்கப்படவில்லை என கூறினார்.
ஆனால், இப் பிரச்னை குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட கிஷோர் சந்திர தேவ் தலைமையிலான கமிட்டி, எம்.பி.க்களுக்கு பணம் அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், மக்களவையில் பிரதமர் பொய்யான தகவலை அளித்துள்ளதால் அவருக்கு எதிராக மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரிமைப் பிரச்னை கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது.
செவ்வாய்க்கிழமை அவை கூடியதும், பிரதமர் மீது உரிமை மீறல் கொண்டு வருவதாக எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் அவையில் தெரிவித்தார். இதனால் எதிர்கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெரும் அமளி... பா.ஜ.க வெளிநடப்பு:
தொடர்ந்து எழுந்த அமளியால் அவை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிந்த பின்னர், இப்பிரச்சினை குறித்து விவாதிக்கலாம் என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
ஆனால் இதனை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்தன. இப்போதே விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க வலியுறுத்தியது. இதற்கு இடதுசாரி கட்சியினரும் ஆதரவ தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ஜ.க அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இதனை தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக மக்களவையில் விவாதத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சபாநாயகர் மீராகுமார் முடிவு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.