ஆத்தூர் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி தேமுதிக அலுவலகம் சூறை
திண்டுக்கல்: ஆத்தூர் தொகு தேமுதிக வேட்பாளரை மாற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் உள்ள தேமுதிக அலுவலகம் சூறையாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் கிழக்கு மாவட்ட தேமுதிக அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் என்று அலுவலகத்தில் புகுந்து தாக்கத் தொடங்கினர். ஆத்தூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று கூறி அலுவலகத்தில் இருந்த கட்சியினரை தாக்கினர். இதில் பலர் காயம் அடைந்தனர். அடி தாங்க முடியாத கட்சியினர் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினர்.
பின்னர் அந்த கும்பல் அலுவலகத்தில் இருந்த மேஜை, நார்காலிகளை அடித்து நொறுக்கின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த கும்பலில் சிலரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தேமுதிக திண்டுக்கல் நகர பொருளாளர் சரவணன் கூறியதாவது,
ஆத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியை மாற்ற வேண்டும் என்று கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்பெருமாளின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இதில் எங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.