தேர்தல் ஆணையம் வாகனச் சோதனை: கடந்த 10 நாட்களில் ரூ. 20 கோடி பறிமுதல்
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் வாகனச் சோதனைகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அவர் சமர்பித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் பொதுமக்களின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர். அப்போது வாகனத்தில் உள்ள பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சொல்லும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆகையால் தேர்தல் அதிகாரிகள் இனி வாகன சோதனை செய்வதற்கும், பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பறிமுதல் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணு கோபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் சீடுணையம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது,
வேட்பாளர்களின் செலவுக் கணக்கை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் தான் தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் இரவு- பகலாக வாகன சோதனை நடத்துகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரூ. 20 கோடி பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் செல்பவர்களிடம் தான் பறிமுதல் செய்யப்படுகிறது. மனுதாரர் தில்லை நடராஜன் கூறுவது போல் தேர்தல் ஆணையம் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கவில்லை என்றார்.
உடனே மனுதாரரின் வக்கீல் சீனிவாஸ் கூறுகையில், வேட்பாளர்களின் வாகனங்களில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் சோதனை நடத்த வேண்டும். அவ்வாறின்றி பொதுமக்களின் வாகனங்கள், பள்ளி வாகனங்களை சோதனை செய்வது முறையல்ல என்றார்.
இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.