ஆண்டு இறுதியில் பதவி விலகுவேன்- ஏமன் அதிபர்
சானா: இந்த ஆண்டு இறுதியில் நானே பதவி விலகி விடுகிறேன் என்று ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே தெரிவித்துள்ளார்.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அமெரிக்க கூட்டுப் படைகள் ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே குறைந்தது 3 மூத்த ராணுவ கமாண்டர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதில் மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மரும் அடக்கம்.
இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகிவிடுவதாக அதிபர் சலே உறுதி அளித்துள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
அதிபரை பதவியில் இருந்து தூக்க செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்கள், ராணுவ கமாண்டர்கள் ஆகியோரின் ஆதரவை பெற்ற எதிர்க்கட்சி அதிபரின் அறிவிப்புக்கு பதிலே கூறவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்பு வற்புறுத்தியபோது அதிபர் சலே மறுத்துவிட்டார். தற்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் அகமது அல் சுபி கூறியதாவது,
நேற்றிரவு சலே மூத்த ஏமன் அதிகாரிகள், ராணுவ கமாண்டர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களிடம் நாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மர் உள்ளிட்ட ராணுவ கமாண்டர்களின் ராஜினாமா அதிபருக்கு எதிரான சதி என்றார்.