கருணாநிதியிடமிருப்பது சாணக்கியம், ஜெ. செய்தது துரோகம்: திருமாவளவன்
திருவாரூர்: முதல்வர் கருணாநிதி கூட்டணி தொடர்பாக சாணக்கியத்தனத்துடன் நடந்து கொண்டார். ஆனால் வைகோவை கழுத்தைப் பிடித்து தள்ளி துரோகம் செய்து நடந்து கொண்டது ஜெயலலிதாவின் கூட்டணி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திருவாரூர் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
திருவாரூர் போகிறேன் என்று தேடி வந்திருக்கிறார் தலைவர் கருணாநிதி. திருவாரூரில் அவர் போட்டியிட்டாலும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர் கருணாநிதி தான். திருவாரூர் தொகுதியைப் போல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இது ஜோதிடம் அல்ல. ஆருடம் அல்ல. முதல்வரை மகிழ்விக்க பேசும் வார்த்தைகள் அல்ல.
கடந்த காலங்களில் கருணாநிதி செய்துள்ள சாதனைகள். கருணாநிதி செய்யப்போகும் சாதனைகளுக்கு சாட்சிகள் திமுக தேர்தல் அறிக்கை. கருணாநிதி தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி வலிமை. இவை மூன்றும் திமுக கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரமாக இருக்கின்றன. கருணாநிதி செய்து முடித்துள்ள திட்டங்களைப் பற்றி ஓட்டு கேட்கிறார். கருணாநிதி செய்யப் போகும் திட்டங்களை பற்றி சொல்லி ஓட்டு கேட்கிறார்.
எதிரணியில் இருப்பவர்கள் முதல்வரை திட்டித் திட்டியே ஓட்டு கேட்கிறார்கள். அவர்களிடத்தில் எந்த திட்டமும் இல்லை. சொல்லுவதற்கு திட்டம் இல்லை. முதல்வரை எதிர்ப்பவர்கள், முதல்வரை விமர்சிப்பதை மட்டுமே கொள்கையாக உள்ளவர்கள். வேறு எந்த கொள்கையும் அவர்களுக்கு கிடையாது.
மொழி கொள்கையோ, இன பாதுகாப்பு கொள்கையோ, வேளாண்மையை பாதுகாக்க வேண்டும், நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோ, அடிதட்டு மக்களை உயர்த்த வேண்டும் என்ற மனிதநேய பார்வையோ, ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற புரட்சிகரமான போர் குணமோ, வேறு யாருக்கும் கிடையாது.
அவர்களுக்கு அடிதட்டு மக்களை காப்பாற்றும் மனித நேயப் பார்வை இல்லை. எதிர்ப்பவர்கள் கருணாநிதியை விமர்சிப்பதை மட்டும் கொள்கையாகக் கொண்டவர்கள். வெளியே இருந்த பா.ம.கவை உள்ளே கொண்டு வந்தவர் கருணாநிதி. அதுதான் சாணக்கியம். எதிர்த்தரப்பில் ம.தி.மு.கவை வெளியே தள்ளியது துரோகம்.
தமிழ்நாட்டில் தலைவர் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் கருணாநிதிதான். அவர் கூட்டணி அமைப்பதில் இருந்து, அமைத்து முடித்ததில் இருந்து நாம் அறிந்திருக்க முடியும். எவ்வளவு சாதூர்யமானவர். சாணக்கியம் நிறைந்தவர் என்பதை கூட்டணி அமைத்த தொடக்கத்தில் இருந்தே நாம் அறிந்திருக்கலாம். வெளியே இருந்த மருத்துவர் ராமதாஸை உள்ளே இழுத்து போட்டார். அதுதான் கலைஞரின் சாதூர்யம்.
எல்லா தோழமைக் கட்சிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு 119 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் பெருந்தன்மையுடன் கருணாநிதி உள்ளார். கருணாநிதி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரசியல் அதிகாரம் உள்ளவர்களாக்க வாய்ப்பு அளிக்கிறார் கருணாநிதி.
ஒடுக்கப்பட்டவர்கள் மீது இருக்கக்கூடிய பற்று. அதனால்தான் இன்றைக்கு கருணாநிதி அவர்கள் சமூக இயக்கங்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து, ஒரு சமூக நீதி கூட்டணியை கட்டி அமைத்திருக்கிறார்.
அங்கே நடிகைகள், நடிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிற கூட்டணி என்று எனக்கு முன்னாள் பேசியவர்கள் சொன்னார்கள். கதாநாயனும், கதாநாயகியும் சேர்ந்து உருவாகிய கூட்டணியில் இடதுசாரிகள் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றார்.
எல்லா தோழமைக் கட்சிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு 119 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் பெருந்தன்மையுடன் கருணாநிதி உள்ளார்.
கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் மண்ணுக்கு, சமூக நீதிக்கு பாதுகாப்பு என்றார் திருமாவளவன்.