தேர்தல் பிரசாரம்: எம்ஜிஆர் ஸ்டைலில் தென்காசியை கலக்கிய சரத்குமார்
தென்காசி: சமக தலைவர் சரத்குமார் நேற்று எம்ஜிஆர் பாணியில் வாகனத்தைவிட்டு கீழே இறங்கி கால்நடையாக ஓட்டு சேகரித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் போட்டியிடுகிறார்.
சமக கட்சியின் நிறுவன தலைவரும், திமுக மாவட்ட செயலாளரும் மோதுவதால் இத்தொகுதி விஐபி தொகுதியாகிவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சரத்குமார் தென்காசி நகராட்சி பகுதியான வேன் ஸ்டாண்டில் தனது பிரசாரத்தை துவங்கி யாரும் எதிர்பாராதவிதமாக வாகனத்தை வி்ட்டு இறங்கி எம்ஜிஆர் பாணியில் கடை கடையாக ஏறி இறங்கி வாக்குகளை சேகரிக்கத் துவங்கினார்.
பின் மினி பஸ், டீக்கடைகள், மருத்துவமனைகள், ஜவுளிக் கடைகள், பெண்கள் தையல் தொழிற்பயிற்சி மையம், கல்வி நிறுவனங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். சாலையில் சென்று கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடம் தனக்கு வாக்களிக்கும்படியும், தங்கள் குடும்பத்தினரை தனக்கு வாக்களிக்க சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார்.
அவருடன் கரு.நாகராஜன், ஆர்.கே.காளிதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications