தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5 மின் உற்பத்தி பிரிவுகள் செயலிழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 பிரிவுகளும் நேற்று ஒட்டுமொத்தமாக செயலிழந்தன. இதனால் மின் உற்பத்தி முடங்கியது.
தென்னக மின் தொகுப்பில் உள்ள சில அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் தென்னக மின் தொகுப்பு குறைந்த அதிர்வு எண்ணில் இயங்கி வருகிறது. இதனால் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் தொடரமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்னக மின் தொகுப்பி்ல் மின் அதிர்வு எண்ணில் ஏற்பட்ட மாற்றத்தால் நேற்று காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி பிரிவுகளும் செயலிழந்தன. தூத்துக்குடி அனல் மின் நிலையம் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 பிரிவுகளை கொண்டது.
மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தின் 5 பிரிவுகளிலும் நேற்று காலை மின் உற்பத்தி முடங்கியதால் தென்னக மின் தொகுப்பி்ல் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கோளாறை சரி செய்து மின் உற்பத்தியை துவங்குவதற்கான நடவடிக்கைகளில் அனல் மின் நிலைய உயரதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களது தீவிர முயற்சியால் காலை 10.23க்கு மூன்றாவது பிரிவு இயங்கத் துவங்கியது.
இதையடுத்து மதியம் 1.14க்கு ஐந்தாவது பிரிவும், மதியம் 2.10க்கு முதலாவது பிரிவும், மாலை 3.22க்கு நான்காவது பிரிவும் இயங்கத் துவங்கின. நேற்று மாலை வரை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவு மட்டும் செயல்படவில்லை.