திருப்பூர் வடக்கு தொகுதியில் 110 பேர் மனு தாக்கல்: தேர்தல் தள்ளிப்போகுமா?
திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் நேற்றுவரை 110 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அங்கு மட்டும் தேர்தல் தேதியை தள்ளிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் சாய, சலவை பட்டறைகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் திருப்பூர் வடக்கு தொகுதியில் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில் 1000 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த நாட்களில் மட்டும் 110 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 21-ம் தேதி 3 பேரும், 22-ம் தேதி 17 பேரும், 23-ம் தேதி 32 பேரும், 24-ம் தேதி 53 பேரும் என்று மொத்தம் 105 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நேற்றுவரை திருப்பூர் வடக்கு தொகுதியில் 20 பெண்கள் உள்பட 110 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் ஓட்டு பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 64 வேட்பாளர்கள் வரை தான் மின்னணு எந்திரத்தை பயன்படுத்த முடியும். தற்போது 110 பேர் மனு தாக்கல் செய்துள்ளதால் வாக்குச்சீட்டு முறையைத் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் வாக்குச்சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட பணிகளை உடனே செய்து முடிக்க இயலாது. அதனால் இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது,
இதுவரை 110 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 64 வேட்பாளர்களை தாண்டினாலே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியாது. அவ்வாறு நடக்கும் போது வேட்பாளர்களுக்கு தனித்தனி சின்னம் ஒதுக்கீடு செய்து வாக்குச்சீட்டு அச்சடிக்க வேண்டும். அதற்கு நாட்கள் ஆகும். வாக்குப்பெட்டியை வைத்துத்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும்.
வாக்குச்சீட்டு அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தால், அடுத்த மாதம்(ஏப்ரல்) 13-ம் தேதி இங்கு தேர்தல் நடத்தும் வாய்ப்பு குறைவு. அதன்பிறகு உள்ள ஒருமாத காலத்துக்குள் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்றனர்.