சென்னை - கொழும்பு விமான சேவையை மீண்டும் துவக்கும் ஏர் இந்தியா!
சென்னை: சென்னை - கொழும்பு இடையிலான விமான சேவையை வரும் 27ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது ஏர் இந்தியா.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை-கொழும்ப-சென்னை மார்க்கத்தில் வரும் 27ம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
ஏஐ 273 என்ற இந்த விமானம் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில், பிற்பகல் 2.15 க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரம் 3.35 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஏஐ 274 விமானம் கொழும்புவில் இருந்து, மாலை 4.35 க்கு புறப்பட்டு 6.00 மணிக்கு சென்னை வந்தடையும்.
பாரிஸ் செல்லும் பயணிகள் சென்னையில் இருந்து வசதியாகவும், எளிதாகவும் செல்லும் வசதி, வரும் 27ம் தேதி முதல் செய்யப்பட்டுள்ளது. ஏஐ 0043/0143 என்ற விமானம் சென்னையில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு டெல்லியில் உள்ள, டெர்மினல் 3 ஐ முற்பகல் 11.10 மணிக்கு சென்றடையும். பாரிஸ் செல்லும் பயணிகள், தங்களின் குடியுரிமை, சுங்க பரிசோதனைகளை சென்னை விமான நிலையத்திலேயே முடித்துக் கொள்ளலாம்.
செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாரிஸ் செல்லும் விமானம் டெல்லியில் இருந்து, பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரம் 6.50 மணிக்கு பாரிஸ் சென்றடையும். பிராங்க்பர்ட் மற்றும் லண்டன் செல்லும் விமானம் டெல்லியிலி்ருந்து, பிற்பகல் 1.30 மற்றும் 2.10 மணிக்கு புறப்படும். இணைப்பு விமானம் மூலம் பாரிஸ், பிராங்க்பர்ட், லண்டன் ஆகிய இடங்களுக்கு போயிங் 777 விமானத்தில் வசதியாகவும், சுகமாகவும் செல்லலாம். இந்த நகரங்களில் திரும்பும் போதும் டெல்லி வழியாக சென்னையை அடையலாம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.