கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள்!
தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வது இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்தார்.
அப்போது தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யசோதா, திருநாவுக்கரசர், டாக்டர். செல்லக்குமார், தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு ஆகியோரும் முதல்வர் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை தேர்தல் குறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
234 தொகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. முதல்வர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வர் ஆவார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும்," என்றார்.
பின்னர் நிருபர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்:
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?
சிலர் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சிலரது தூண்டுதலால் நடக்கும் இவற்றை பொருட்படுத்த வேண்டாம். ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரசாரத்துக்கு வருகிறார்களா?
இதுபற்றி இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும்.
காங்கிரஸை எதிர்த்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளாரே?
அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, என்றார்.