கட்சி விரோத நடவடிக்கை-கிருஷ்ணகிரி சிபிஐ செயலாளர் நீக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராமச்சந்திரனிடமிருந்து கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் ரூ. 50 லட்சம் பணம் வாங்கி விட்டதாக புகார் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு சிபிஐ கட்சிக்குள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வேட்பாளர் தேர்வுக்குக் கண்டனம் தெரிவித்து 7000 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்டச்செயலாளர் நாகராஜ் ரெட்டி கூறுகையில்,
மாநில துணை செயலாளராக இருந்த மகேந்திரன் 50 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கட்சி நிர்வாகிகளை ஆலோசிக்காமல் தளி தொகுதி வேட்பாளரை அறிவித்துவிட்டார்.
கட்சியில் 30 வருடமாக தியாகம் செய்தவர்கள் எல்லாம் ஒன்றுகூடி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்துள்ளோம். சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் வேறு கட்சியில் இணைவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ரெட்டி.
இந்த ரெட்டி கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர். அதேசமயம், தற்போது சிபிஐ வேட்பாளராக நிற்கும் ராமச்சந்திரன், கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரெட்டி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழுவிற்கு செயலாளராக இருந்து வந்த நாகராஜரெட்டி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு தளி தொகுதியை ஒதுக்கவில்லை என்பதால், கட்சி மாறி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டதாக நேரில் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து, கட்சிக்கு எதிராக பகிரங்கமாகச் செயல்பட்டுள்ளார்.
எனவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டு விட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தளி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் தமிழ் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் நாகராஜரெட்டி குற்றம் சாட்டி இருப்பதால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவற்கான கடிதம் அவருக்கு முன் அறிவிப்பாக அனுப்பப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், பொது மக்களும், நாகராஜ ரெட்டியின் அவதூறு பிரசாரத்தை புறக்கணித்து, தேர்தல் பணிகளில் குழப்பத்திற்கு இடம் தராது தொடர்ந்து பணியாற்ற வேண்டுகிறேன் என்று கேட்டுள்ளார் தா.பாண்டியன்.