திமுகவுக்கு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும்-ப.சிதம்பரம்

திருவாரூர் கீழவீதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து சிதம்பரம் பேசுகையில்,
இந்தியா வலிமையான ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டின் திருவிழாவாக தேர்தல் நடக்கிறது. திருமண வீடுபோல் திருவாரூர் களைகட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் ஆட்சிபுரிந்துள்ளன. பொதுவாக தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயத்திற்கு வெளியிடப்படும்.
அதனை யாரும் படிப்பது இல்லை. கட்சி அலுவலத்தில் அதை கட்டு கட்டாக போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், முதல் முறையாக 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகனாக உருவாக்கப்பட்டது. மக்களை கவர்ந்தது இந்த தேர்தல் அறிக்கை. இலவச கலர் டி.வி., 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாய கடன் தள்ளுபடி என அனைத்து வாக்குறுதிகளும் மக்களிடையே வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
சிலர் இந்த தேர்தல் அறிக்கையை பொய், புளுகுமூட்டைகள் என பிரசாரம் செய்தனர். ஆனால் நிச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நான் பிரசாரம் செய்தேன். அதிமுக ஆதரவாளர்கள், திமுக ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரையும் கேட்கிறேன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா?. முதல்வர் கருணாநிதி கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளார்.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என அறிவித்து ஒரு ரூபாய்க்கு வழங்கியது திமுக அரசு. ரூ.1 கோடியே 58 ஆயிரத்து 888 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு ஆண்டின் நிதிநிலை திட்டம் ரூ.9,000 கோடி தான். ஆனால் ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தது. இதனை பார்த்துதான் மத்திய அரசே ரூ.72,000 கோடி விவசாயக்கடனை ரத்து செய்தது.
ஏழை, எளிய விவசாய குடும்பத்தினர் உயர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள கலைஞர் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சொல்லாததையும் செய்கிறவர் கலைஞர் தான். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சம் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் வழங்கியுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு தகுதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் நிதியில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திருமண உதவித்தொகை ரூ.30,000, மகப்பேறு உதவித்தொகை ரூ.10,000, முதியவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை, 58 வயது கடந்தவர்களுக்கு இலவச பஸ் பாஸ், லேப்டாப் என பயனுள்ள திட்டங்கள் அறிவித்துள்ளன. நிச்சயம் நிறைவேற்றுவார். அதில் மிக்சி அல்லது கிரைண்டர் என்பதில், நடுவில் உள்ள அல்லது என்பதை எடுத்துவிட்டு இரண்டையும் வழங்க முதல்வரிடம் அவசியம் பேசுவேன். நிச்சயம் வழங்குவார். திமுகவிற்கு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத அதிமுக-வாசன்:
இந் நிலையில் ஈரோட்டில் பிரச்சாரம் செய்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில்,
ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியின் ஆதரவு பெற்ற, முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் அனைத்து துறைகளிலும் முதன்மையாக முன்னேற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மத்திய, மாநில திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமிக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் தற்போது ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடனில் தவித்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவர்களை மீட்க ரூ.7,000 கோடி விவசாயக் கடனை முதல்வர் கருணாநிதி தள்ளுபடி செய்துள்ளார்.
மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாத அதிமுகவினர், திமுக கூட்டணியை குறை கூறுவதா?. கூட்டுறவு சங்கங்களில் வழங்கிய வேட்டி-சேலையை வாங்கக் கூடாது என்று கூறி நெசவாளர்களை கஞ்சித் தொட்டிக்கு அனுப்பியது அதிமுக தான். அதிமுக ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.
ஈரோட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்துசாமி. எனவே, உங்கள் பகுதியில் மேலும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்திட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அனைத்து திட்டங்களும் வீடு தேடி வரும்.
உங்கள் வாக்கு உங்கள் பகுதியின் வளர்ச்சிக்கா? அல்லது வீழ்ச்சிக்கா? என்று சிந்தித்து வாக்களியுங்கள். ஈரோடு மாவட்ட சட்டசபை தொகுதிகளில் அரசின் திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை-நாளை பிரணாப் வெளியீடு:
இந் நிலையில் தமிழக சட்டபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார்.












Click it and Unblock the Notifications