டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு
சென்னை: கோடையை முன்னிட்டு பீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 மாத காலமாகவே பீர் தட்டுப்பாடு உள்ளது.
சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்கள் முதல் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.
நகரங்களில் பீர் சப்ளை குறைவாக இருப்பதால் கடைக்கு வந்தவுடனேயே விற்றுவிடுகிறது. கோடை வெயிலில் ஜில் என்று பீர் குடிக்க விரும்புபவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பீர் தான் கிடைப்பது இல்லை.
தினமும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பெட்டி வரை பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். அதனால் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பீர் வகைகள் கொள்முதல் செய்து வினியோகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு தேர்தல் நடந்ததையடுத்து இன்னும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க முடியவில்லை.
மது தயாரிக்க புதிய பீர் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வளசரவாக்கத்தில் இயங்கி வந்த பீர் தயாரிப்பு கம்பெனி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் பீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதுவும் பீர் தட்டுப்பாடிற்கு ஒரு காரணமாகும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் பீர் தட்டுப்பாடு நீங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் மே மாதம் இறுதி வரை பீர் தட்டுப்பாடு தொடர வாய்ப்பு உள்ளது. இந்த தட்டு்ப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.