இலங்கைத் தூதரகம் முன் போராட்டம்-தங்கபாலு கைது
சென்னை: தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கும் இலங்கை அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை நேரில் சந்தித்து தெரிவித்தனர். மத்திய அரசின் இம்முயற்சிக்கு தமிழக அரசும் ஆதரவாக இருந்தது.
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே வாக்குறுதி அளித்திருக்கும் நிலையிலும் இலங்கை கடற்படையினரின் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அன்மையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கின. இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலை சென்னை டிடிகே சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன் தங்கபாலு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பேரணி செல்ல முயன்ற தங்கபாலு மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய தங்கபாலு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் வன்முறைத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் இலங்கை அதிபரை சந்தித்து முயற்சிகளை மேற்கொண்டனர். மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசும் துணை நின்றது.
இலங்கை அதிபர் ராஜபட்சே இதற்கு உறுதியளித்தபோதும், இலங்கை கடற்படையினரின் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள், கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியிருப்பது தமிழகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.