இந்திய வரலாற்றில் மிக மோசமானது மன்மோகன் சிங் ஆட்சிதான்! - அத்வானி
கொல்கத்தா:சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சி மன்மோகன்சிங்குடையதுதான் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை தேர்தல் கூட்டத்தில் அவர்பேசுகையில், "2008-ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பி.களை விலைக்கு வாங்கி லஞ்ச, ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன் அரசு.
தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து, எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் உள்ள இன்றைய ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு.
அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கையை அவர் சிதைத்துவிட்டார். இன்று மிகமிக மோசமாக ஆட்சி நடத்துகிறார்.
1952-ம் ஆண்டில் இருந்து நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சிகளை கவனித்து வருகிறேன். சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான்," என்றார் அத்வானி.