குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்
டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் பட்.
அவர் மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம்," என்றார். நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்ஜீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
முதல்வர் நரேந்திர மோடியிடம் இந்தக் கலவரங்கள் குறித்து கடந்த ஆண்டு இரு தினங்கள் விசாரணை மேற்கொண்டது சிறப்பு புலனாய்வு குழு. அப்போது தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மோடி மறுத்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications