எண்டோசல்பானை தடை செய்யக்கோரி அச்சுதானந்தன் இன்று உண்ணாவிரதம்
திருவனந்தபுரம்: மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்யக் கோரி கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று திருவனந்தபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.
கேரளாவில் காசரக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் முந்திரி மரங்களுக்கு எண்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கிறார்கள். இந்த மருந்தால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய வேண்டும் என கேரளாவில் கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமதி தலைமையிலான குழு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய வலியுறுத்தியது. இதற்கிடையே எண்டோசல்பானை தடை செய்யக் கோரி கேரள முதல்வர் அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் இன்று (25-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.