அக்னி நட்சத்திரம்: மே 4 முதல் 29 வரை வெயில் வறுத்தெடுக்கும்!
சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி முதல் தொடங்குகிறது. தொடர்ந்து 29-ந் தேதி வரை அக்னியின் தாக்கம் நீடிக்கவிருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியிருப்பதை தொடர்ந்து சென்னையில் கடந்த வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் பறக்கிறது. காலையிலே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் வெயிலின் தாக்கத்திற்கு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 2 நாள் பெய்த கோடை மழை மட்டும் தான் ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது.
கோடையை சமாளிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் மற்றும் கேழ்வரகு கூழ் விற்பனை படு சூடாக உள்ளது.
இந்த நிலையில் வெயிலின் கோர தாண்டவம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் வரும் மே 4-ந் தேதி முதல் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 29-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது.
கடந்த ஆண்டுகளில் எல்லாம் அக்னி நட்சத்திரம் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் வெயில் தினமும் 100 டிகிரியை தாண்டி மக்களை மிரட்டியது.
காப்பாரா வருண பகவான்?
சில ஆண்டுகளில் மட்டும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் கோடை மழை அதிகமாக பெய்து, மக்களை வெயிலில் இருந்து வருண பகவான் காத்து உள்ளார். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்று பொது மக்கள் கவலைப்பட தொடங்கி விட்டனர். வருண பகவானின் அருள் பார்வை இந்த ஆண்டு கிடைக்காதா? என்று மக்கள் அவரை வேண்ட தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு இந்த வாரம் ஓரளவு பலனும் கிடைத்துள்ளது!
கோடையை சமாளிக்கும் விதமாக ஒரு பகுதியினர் தங்கள் குழந்தைகளுடன் ஊட்டி, கொடைக்காணல் மற்றும் கோடைஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். ஒரு சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
நோய் பரவும் அபாயம்
பொதுவாக அக்னி நட்சத்திரத்தின் போது தோல் வியாதிகள், வயிற்று கோளாறுகள் மற்றும் உடற்உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கிருமிகளால் தொண்டைகளில் நோய் கிருமிகள் தொற்றும் அபாயமும் ஏற்படக்கூடும்.
இதனை தவிர்க்க அக்னி வெயில் காலங்களில் தரமான, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஏ. முத்திரை இல்லாத, கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை நிறுத்த வேண்டும்.
அதே நேரத்தில் உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பை சரி செய்ய தரமான பழங்கள், இளநீர், மோர் போன்றவற்றை பருகி உடலை சீராக வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளை பொறுத்தவரையில் உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் சரும வியாதிகள் உடனடியாக தொற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு என்பதால் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் கூறி வருகின்றனர்.