பிஇஎல் வர்த்தகம் ரூ 5550 கோடி; லாபம் ரூ.1,120 கோடி!
பெங்களூர்: மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் (2010-11) பிஇஎல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,120 கோடியை ஈட்டியுள்ளது.
இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவன தலைவர் அஸ்வின் குமார் கூறுகையில், "பிஇஎல் நிறுவனத்தின் நிகர லாபம் வரி செலுத்துவதற்கு முன்பு ரூ. 1,120 கோடியாகும். வர்த்தகம் ரூ. 5,550 கோடியாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 77 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரூ. 23,600 கோடி வரை புதிய பணிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது.
ராணுவத்திற்காக 78 சதவிகிதம் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெங்களூரில் உள்ள நிறுவனம் உள்பட நாடு முழுவதும் 9 பகுதிகளில் பிஇஎல் நிறுவனம் கிளை பரப்பியுள்ளது. இவை அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன.
உலகத் தரத்துடன் எங்கள் நிறுவனம் போட்டி போட வேண்டியுள்ளது. இருப்பினும் திறமைசாலிகளாக உள்ள ஊழியர்களும், தொழிலாளர்களும் தரம் குறையாமல் அனைத்து பொருள்களும் தயாரிப்பதால் எங்கள் நிறுவனம் லாபகரமாக செயல்படுகிறது. ராடார், சோலார் செல், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவைகளை மலேசியா, நேபால், இலங்கை இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தகம் செய்து வருகிறோம்," என்றார்.