விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி!
விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்துள்ள இந்தத் தோல்வி தமிழ் உணர்வாளர்களுக்கு சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தலித் சக்தியா, தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக இருப்பவர் தொல். திருமாவளவன். திமுக கூட்டணியில் இடம் பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸை எதிர்த்து கடுமையாகக் கூட குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டவர்.
ஈழம் பற்றி எறிந்தபோது இவர் கொதித்தெழுந்து குரல் கொடுத்தபோதெல்லாம், திமுக மூலமாக அவரை அடக்கி வைத்தது வீணாய்ப் போன காங்கிரஸ். இவரை எம்.பியாகக் கூட ஆரம்பத்தில் காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. கடுமையாகப் போராடித்தான் எம்.பி தேர்தலில் போட்டியிடவே முடிந்தது திருமாவளவனால்.
ஈழத்தில் என்ன நிலை காணப்படுகிறது என்பதை அறிவிதற்காக காங்கிரஸ் தரப்பில் இலங்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் அனுப்பப்பட்டபோது அதில் திருமாவளவனும் இடம் பெற்றிருந்தார். அப்போது அங்கு எதுவுமே பேசக் கூடாது என்று கண்டிஷன் போட்டு திருமாவளவனையும் அழைத்துச் சென்றது காங்கிரஸ்.
அங்கு போய் சர்வாதிகாரி ராஜபக்சேவை சந்தித்தபோது, நீங்கள் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இல்லையென்றால் செத்துப் போயிருப்பீர்கள் என்று அந்த தமிழ் ரத்தங்களைக் குடித்த ராஜபக்சே முழங்கியபோது ஒரு காங்கிரஸ் எம்.பியும், திமுக எம்.பியும் கூட ராஜபக்சேவைக் கண்டித்துப் பேசவில்லை.
இப்படி திமுகவுக்கும், கருணாநிதிக்கும் இக்கட்டு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்ட திருமாவளவன், இந்த தேர்தலில் கூட சீட்டுக்காக திமுகவை அதிகம் நெருக்கவில்லை.
நிறைய சீட்கள் கேட்டார் என்றாலும் கிடைத்தது பத்துதான். இருந்தாலும் அதிலும் திருப்திப்பட்டுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தி மிகத் தீவிரமாக திமுகவுக்காகப் பிரசாரம் செய்தார் திருமாவளவன்.
ஆனால் என்ன புண்ணியம், ஒரு இடத்தில் கூட திருமாவுக்கு வெற்றி கிடைக்கவில்லையே. இது தலித் மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ் உணர்வாளர்களுக்கும் கூட பெரும் ஏமாற்றம்தான்.
நிச்சயம் திருமாவளவனின் வாக்கு வங்கியில் குறைபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர், கண்டிப்பாக சிறுத்தை வேட்பாளர்களுக்காக வேலை பார்த்திருக்க மாட்டார்கள். இதுதான் திருமாவளவன் கட்சியினர் தோல்வியடைய முக்கியக் காரணமாக இருக்க முடியும்.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை திருமாவளவன் குறைத்துக் கொண்டதும் கூட அவருக்கு எதிராக வாக்குகள் திரும்பியிருக்கக் காரணமாக இருக்கலாம்.
எப்படியோ, தமிழக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தமிழ் உணர்வுள்ள மக்களின் பிரதிநிதியாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த தோல்வி பேரிடிதான்.