மமதா, ஜெயலலிதாவை சேர்த்து இந்தியாவில் 4 பெண் முதல்வர்கள்
டெல்லி: தீதியும், அம்மாவும் முதல்வர் பொறுப்பேற்கும் பட்சத்தில் இந்தியாவில் முதன்முதலாக ஒரே நேரத்தில் 4 பெண் முதல்வர்கள் பதவியில் இருப்பார்கள்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியும், தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மமதாவும், ஜெயலலிதாவும் முதல்வராகிறார்கள்.
ஏற்கனவே ஷீலா தீக்ஷித் டெல்லி முதல்வராக இருக்கிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாடிக் கட்சி தலைவர் மாயாவதி முதல்வராக இருக்கிறார். அவர் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. இன்னும் ஓராண்டில் அடுத்த தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
அசைக்கவே முடியாத அளவு கடந்த 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த இடது சாரிகளுக்கு இந்த தேர்தலில் எதிர்பார்க்காத, நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு படுதோல்வி. ஆனால் மமதா பானர்ஜி கட்சி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை தோற்கடித்துள்ளது. ஏற்கனவே 2 ஜி ஊழலில் சிக்கித் தவிக்கும் திமுகவின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா தனது பிரசாரங்களில் கூறி வந்தார். அவரது கூற்றை செவிமடுத்த மக்கள் ஜெயலலிதாவை முதல்வராக்கியுள்ளனர்.
இதையடுத்து இந்தியாவில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 4 பெண்கள் முதல்வர் பதவியில் இருப்பார்கள்.