மே. வங்கத்தில் 34 ஆண்டு கால கம்யூ. ஆட்சிக்கு 'ரெட்' போட்ட மமதா
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சி தான் நடந்து வந்தது. யாராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மமதாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 216 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் 177 தொகுதிகளில் முன்னிலை உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து மமதா பானர்ஜி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை பெரும்பான்மையுடன் இருந்த இடதுசாரிகள் வெறும் 73 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
அஸ்ஸாமில் காங். ஆட்சி
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த தேர்தலில் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அங்கு மூன்றாவது முறையாக தருண் கோகாய் முதல்வராகிறார்.
கேரளாவில் இழுபறி
கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது.
இருப்பினும் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது.
மொத்தத்தில் அஸ்ஸாமைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.