மார்க்சிஸ்ட் கோட்டையான விளவங்கோட்டை பிடித்த காங்கிரஸ்
நாகர்கோவில்: இது நாள் வரை மார்க்சிஸ்ட் கட்சி கோட்டையாக இருந்து வந்த விளவங்கோட்டை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விளவங்கோடு தொகுதியை ஒதுக்கியது. வேட்பாளராக திருவேட்டார் தொகுதி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் போட்டியிட்டார்.
இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் விளவங்கோடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. -வாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜான் ஜேக்கப் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் மார்க்சிஸ்ட் மீது பரபரப்பு குற்றசாட்டு கூறியிருந்தார். இருப்பினும் அவர் கடைசியில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று கொண்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான போது விளவங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வக்கீல் விஜயதாரணி வெற்றி பெற்றுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கடைசியாக 199-ம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் இந்த தொகுதியை தக்க வைத்திருந்தது. தற்போது மீண்டும் விளவங்கோடு தொகுதியை காங்கிரஸ் கைப்பறறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் விளவங்கோடு தொகுதியை காங்கிரஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது அக்கட்சி தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.