சட்டசபை தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 104 பேர் டொபாசிட் இழந்தனர்
நெல்லை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 104 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், ஆகிய தொகுதிகளில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவியது.
கடையநல்லுர்-வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக-காங்கிரஸ், தென்காசியில் திமுக-சமக, நான்குநேரியில் சமக-காங்., ராதாபுரத்தில் காங்.-தேமுதிக, பாளையங்கோட்டையில் திமுக-மா.கம்யூ ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
இவர்கள் தவிர பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்தன. நெல்லை தொகுதியில் அதிகபட்சமாக 17 பேரும், நான்குநேரி தொகுதியில் குறைந்தபட்சமாக 7 பேரும் போட்டியிட்டனர்.
10 தொகுதிகளிலும் மொத்தம் 124 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிடுபவர்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெற மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெற வேண்டும். அவ்வாறு பெறாதவர்களுக்கு டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்காது.
நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் திமுக, அதிமுக கூட்டணி தவிர வேறு எந்த வேட்பாளர்களுக்கும் 6ல் ஒரு பங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் 10 தொகுதிகளிலும் 20 வேட்பாளர்கள் தவிர 104 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.