34 ஆண்டுகளுக்குப் பின்னர் படுகர் இன எம்.எல்.ஏ.: குஷியில் குன்னூர்
குன்னூர்: குன்னூர் சட்டசபை தொகுதியில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் படுகர் இனத்தைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.
குன்னூர் தொகுதி
குன்னூர், கோத்தகிரி என இரு தாலுகாக்களை உள்ளடக்கியது குன்னூர் சட்டசபை தொகுதி. இங்கு படுகர் இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இத்தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.
சென்னை மாகாண தேர்தல் நடந்த, கடந்த 1957, 1962ல் குன்னூர் தொகுதியில் படுகர் இனத்தைச் சேர்ந்த மாதாகவுடர், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1967ல் நடந்த தேர்தலில் படுகர் இனத்தைச் சேர்ந்த கவுடர் திமுக சார்பில் வெற்றி பெற்றார். கடந்த 1971ல், படுகர் இனத்தைச் சேர்ந்த கருணைநாதன் (திமுக) வெற்றி பெற்றார்.
தனித்தொகுதியானது
கடந்த 1977 துவங்கி 2006 சட்டசபை தேர்தல் வரை குன்னூர் தொகுதி தனித்தொகுதியாக இருந்ததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படுகர் இன மக்களால் போட்டியிட முடியவில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் குன்னூர் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட படுகர் இனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
34 ஆண்டுகளுக்கு பின்
இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டு கால காத்திருப்பிற்குப் பின் படுகர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகி உள்ளது குன்னூர் வாழ் படுகர் இன மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.