எதியூரப்பாவுக்கு தனிப் பெரும்பான்மை உள்ளது: ஆளுநர் பரத்வாஜ்
கர்நாடகாவில் ஆளுநர் பரத்வாஜுக்கும்ம், முதல்வர் எதியூரப்பாவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் எதியூரப்பா ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பரத்வாஜ் பரிந்துரை செய்தார்.
அந்தப் பிரச்சனை ஓய்ந்த சூட்டோடு தற்போது மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். உடனே எதியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 121 பேருடன் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
இதற்கிடையே ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பாஜக மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினர். இது தொடர்பாக பிரதமரையும் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் முதல்வர் எதியூரப்பாவுக்கு அமைச்சரவையில் அமோக ஆதரவு இருப்பதாக ஆளுநரே இன்று ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வருக்கு பெரும்பான்மை இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் பூதாகரமாய் வெடிக்கும் என்று நினைத்த பிரச்சனை தீர்ந்துள்ளது.
கடந்த ஒரு வார பிரச்சனைக்கு பிறகு இன்று முதல்வரும், ஆளுநரும் விழா ஒன்றி்ல் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
தன்னை திரும்பப் பெற குடியரசுத் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஆளுநர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.