மீண்டும் குழப்பம்-பாக்.கிடம் கொடுத்த பட்டியலில் உள்ள தீவிரவாதி மும்பை சிறையில்!
டெல்லி: பாகிஸ்தானும், உலக நாடுகளும் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்று வருகிறது சிபிஐ. இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் என்று கூறி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு நபரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்து, இந்தியாவின் நிலை வெட்கக்கேடாகியுள்ளது.
இந்தியாவால் அதிகம் தேடப்படும் தீவிரவாதிகள் குறித்த ஒரு பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டு நாட்டின் பெயரைக் கெடுப்பதாக அமைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த வஸூல் கமர் கான் என்பவரின் பெயரால் முதலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இவர் 2003 மும்பையின்முலுந்த் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தானேவில் உள்ள வாங்க்லே எஸ்டேட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி இவர் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் விலே பார்லே, கட்கோபர் குண்டுவெடிப்புகளிலும், 2002 மும்பை ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
மும்பைக்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வரும் இவரை அதிகம் தேடப்படும் நபர் பட்டியலில் சேர்த்து அதை பாகிஸ்தானுக்குக் கொடுத்துள்ளது இந்தியா. அதிகம் தேடப்படும் நபர்கள் பட்டியலிலிருந்து கானின் பெயரை சிபிஐ நீக்காததால் வந்த குழப்பம் இது. மேலும் இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவிலும் இவரது பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த குழப்பத்தால் உள்துறை அமைச்சகத்திற்கும் அவப் பெயர் ஏற்பட்டது. இருப்பினும் சிபிஐதான் இதற்குக் காரணம் என்று உள்துறை அமைச்சகம் விளக்கியது. சிபிஐ கூறினால் அதை அப்படியே ஏற்காமல், பரிசீலனை செய்திருக்கலாமே என்று கேள்விக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து பதில் இல்லை.
மீண்டும் ஒரு குழப்பம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழப்பத்தை செய்துள்ளன சிபிஐயும், உள்துறை அமைச்சகமும்.
மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரின் பெயரையும், தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது இந்தியா. அதாவது, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபரை இன்னும் தேடி வருவதாக கூறியுள்ளது இந்தியா.
இந்தக் குழப்பத்திற்கு பாஜக கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு குழப்பமான பட்டியலால் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேலிக்கூத்தாக்கி விட்டதாக பாஜக கண்டித்துள்ளது.
இந்தக் குழப்பத்திற்கும் சிபிஐதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓம்கார் கேடியா இதுகுறித்துக் கூறுகையில், பெரோஸின் பெயர் தவறுதலாக அதிகம் தேடப்படுவோர் பட்டியலி்ல இடம் பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட அவரது பெயரை பட்டியலிலிருந்து நீக்காமல் விட்டு விட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது என்றார்.
இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து எஸ்.பி, டிஎஸ்பி அந்தஸ்திலான இரு அதிகாரிகளை சிபிஐ சஸ்பெண்ட் செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ செய்தித் தொடர்பாளரான தரணி மிஸ்ரா என்பவர் கூறுகையில், அப்துல் ரஷீத் கான் கைது குறித்த தகவல் 2010 பிப்ரவரியில் சிபிஐயின் இன்டர்போல் பிரிவுக்கு தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ரெட் கார்னர் நோட்டீஸ் பட்டியலிலிருந்து கானின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி அதைச் செய்யவில்லை. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஒரு குழப்பம்
இதேபோல இன்னொரு குழப்பத்தையும் சிபிஐ செய்துள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர் உல்பா தலைவரான ராஜ் குமார் மேகான். ஆனால் அவரது பெயர் இன்னும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. நல்ல வேளையாக இவரது பெயரையும் சேர்த்து பாகிஸ்தானிடம் கொடுக்காமல் விட்டது இந்தியா.
'காலாவதி வாரண்ட்டுடன் டென்மார்க் போன சிபிஐ'
இதற்கிடையே புரூலியா ஆயுத வழக்கில் தேடப்பட்டு வரும் கிம் டேவியைக் கைது செய்ய காலாவதியான வாரண்ட்டுடன் டென்மார்க் போய் இந்தியாவின் பெயரை கேவலப்படுத்தி விட்டு வந்துள்ளது சிபிஐ. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூ்த்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், டென்மார்க்கை சேர்ந்த கிம் டேவியை கைது செய்வதற்காக அந்த நாட்டுக்கு காலாவதியான வாரண்ட்டுடன் சிபிஐ சென்று நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தவறு, இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம். இந்த தவறுக்கு மத்திய அரசில் யாரேனும் இதுவரை பொறுப்பேற்றுக் கொண்டார்களா?.
இதேபோல சிறையில் இருப்பவர்களையும், ஜாமீனில் வெளியே இருப்பவர்களையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அதனை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளா என்று சாடியுள்ளார் சுஷ்மா.
கிம் டேவி குறித்த குழப்பத்திற்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், பாஜக குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பு உண்மையான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை. பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்தின் கீழ்தான் சிபிஐ செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீதான தீவிரவாதப் புகார்களை இந்தியா அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக கூறி வரும் நிலையில் அதுதொடர்பான ஆதாரங்களையும், தீவிரவாதிகள் குறித்த பட்டியலையும் எவ்வளவு துல்லியமாக அது வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி அடுத்தடுத்து குப்பாச்சு, குழப்பாச்சு வேலைகளில் சிபிஐயும், மத்திய உள்துறையும் செயல்பட்டால் இந்தியா சொல்வதை யாராவது நம்புவார்களா அல்லது இந்தியாவின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மைதான் வருமா...?