பொதுமக்களை சுட்டுக் கொன்ற எகிப்து போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை
கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற ஒரு போலீஸ் அதிகாரிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. தொடர் போராட்டங்களின்போது சுமார் 846 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு இராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதிபருக்கு எதிரான போராட்டத்தின்போது அப்பாவி பொதுமக்களைக் கொன்ற போலீசார் மற்றும் இராணுவத்தார் மீது தற்போதுள்ள இராணுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எகிப்து போலீஸ் அதிகாரி முகமது இப்ராஹிம் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 20 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர். இந்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பளித்தபோது அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜரானாலோ தான் இந்த தீர்ப்பை எதிர்த்து மேலமுறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்படும் என்று
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.