'ஜிகாத் பயிற்சிக்காக பிரான்ஸ் வாலிபர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய ரஷீத்': ப.சிதம்பரம்
டெல்லி: தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக பிரான்சில் கைது செய்யப்பட்ட மதுரை வாலிபர்
ரஷீத் ஆப்கானிஸ்தானில் ஜிகாத் பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், சிமி இயக்கத்துடன் தொடர்புள்ள இவர் வேலைக்காக பிரான்ஸ் சென்று, அங்கு தீவிரவாத கொள்கை கொண்டவர்களுடன் நெருக்கமாகி அவர்களுக்கு உதவியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஜிகாத் பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார். இவரது வலையில் இந்தியர்கள் யாரும் சிக்கவில்லை. முதலில் இவரது குழு மாதம் ஒரு முறை சந்தித்து வந்துள்ளது. பின்னர் அடிக்கடி சந்தித்து தீவிரவாத பயி்ற்சி-தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களிடம் பயிற்சி பெற ஆட்களை அனுப்பியதாக பிரான்ஸ் போலீசாரிடம் ரஷீத் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த விஷயத்தில் பிரான்ஸ் முழுமையாக விசாரித்து முடிக்கும் வரை ரஷீதுக்கு இந்தியத் தூதரக உதவிகள் ஏதும் வழங்கப்படாது. விசாரணையின் முடிவைப் பொறுத்தே மத்திய அரசின் செயல்பாடு இருக்கும்.
ரஷீத் விஷயத்தில் பிரான்சும் இந்தியாவும் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகின்றன. தனது 21 வயதிலிருந்தே தீவிரவாத எண்ணங்களில் மூழ்கியுள்ளார் ரஷீத் என்பது உளவுத் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் சிதம்பரம்.