தயாநிதி மாறன் உள்பட 85 பேரிடம் விசாரணை நடத்த ஜேபிசி முடிவு
தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இருந்த அனைத்துத் தொலைத் தொடர்பு அமைச்சர்களையும் வரவழைத்து விசாரிக்கவும் ஜேபிசி தீர்மானித்துள்ளது.
அதன்படி ராசாவும் ஜேபிசி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். மொத்தம் 85 சாட்சியங்களை விசாரிக்கவுள்ளது ஜேபிசி. முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இதில் அடக்கம். இவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறையை பார்த்தவர்கள்.
மாறன், ராஜா மட்டுமல்லாமல் அப்போல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்படவுள்ளது. இதை ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ நேற்று உறுதிப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் பிரதாப் சி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தற்போது அதிக நெருக்கடிக்குள்ளாகியிருப்பவர் தயாநிதி மாறன்தான். இவர் மீது ஏர் செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடுமையான புகார்களைக் கூறியுள்ளார். இதை முக்கிய சாட்சியமாக சிபிஐ எடுத்துக் கொண்டுள்ளது.தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரவும் அது தயாராகி வருகிறது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது அது காத்திருக்கிறது.
மேலும் நேற்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் நேற்று ஜேபிசி முன்பு ஆஜராகி தயாநிதி மாறனின் பங்கு குறித்து விளக்கியுள்ளார். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
விரைவில் தயாநிதி மாறன் பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் விலகாவிட்டால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தால் உடனடியாக அவரை பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.