இது 2வது சுதந்திரப் போராட்டம்-காந்தி சமாதியில் அன்னா முழக்கம்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து காந்தியவாதி அன்னா ஹஸாரே தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
முன்னதாக ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெல்லி காவல்துறை திடீரென அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்ததால் போராட்டக் களம் காந்தி சமாதிக்கு மாற்றப்பட்டது.
இன்று காலை முதலே பெரும் திரளான மக்கள் காந்தி சமாதியில் குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் அதிகாலையிலிருந்தே பெரும் திரளான மக்கள் அங்கு குவியத் தொடங்கி விட்டனர்.
பத்தரை மணியளவில் அன்னா ஹஸாரே உண்ணாவிரத மேடைக்கு வந்தார். அவரை அங்கு கூடியிருந்தார் உற்சாக குரல் எழுப்பி வாழ்த்தி வரவேற்றனர். அன்னா ஹஸாரே மேடையில் ஏறி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
முன்னதாக காந்தி சமாதியில் வணங்கி மரியாதை செய்தார் அன்னா. சமாதியை முத்தமிட்டு வணங்கிய பின்னர் அவர் உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.
உண்ணாவிரத மேடையில் அன்னா பேசுகையில், ஊழலுக்கு எதிரான எனது இந்தப் போராட்டம் 2வது சுதந்திரப் போராட்டம். லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நான் மீண்டும் டெல்லி வர நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு ஏராளமான தடைகளைப் போட்டு வருகிறது மத்திய அரசு. மேலும் சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற சிவில் சமூக உறுப்பினர்களை அவமதிக்கும் வகையிலும், அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் அரசு செயல்படுகிறது. அவர்களுக்கு எதிராக விஷமப் பிரசாரத்தில் அரசு ஈடுபடுகிறது என்றார் அன்னா.
அன்னா ஹஸாரேவுடன் கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட பல துறை பிரமுகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பாடல்கள், தேச பக்திப் பாடல்களை பாடியபடியும், உணர்ச்சி பொங்க பேசியபடியும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.
முன்னதாக உண்ணாவிரத இடத்தை டெல்லி காவல்துறை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருமளவில் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம்
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை, மும்பை உள்பட நாட்டின் பல இடங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.