'பதவிக்கு வந்தாச்சு... இலாகா எங்கே?' - இது புதுச்சேரி கலாட்டா
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி. சிவக்குமார் ஆதரவுடன் அக்கட்சி தனித்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக என் ரங்கசாமி கடந்த மே மாதம் 16-ந்தேதி பதவி ஏற்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற அவர், இந்திரா நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் முதல்வராகப் பதவி ஏற்ற 22 நாட்களுக்கு பிறகு புதிதாக பி.எம்.கல்யாணசுந்தரம், சந்திரகாசு, ராஜவேலு மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். புதுவை அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் இடம் பெற முடியும்.
இப்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். ஆறாவது அமைச்சராக தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகவும், சில காரணங்களால் அவரது பதவி ஏற்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் அசோக் ஆனந்துக்கு பதிலாக வேறு யாரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
இந்த அமைச்சர் பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே பதவி ஏற்ற 4 புதிய அமைச்சர்களுக்கும் இதுவரை இலாகா அறிவிக்கப்படவில்லை. தற்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து 15 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது.
மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட புதுவை சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் பலம் தேவை. அதேவேளையில் தற்போது சட்டசபையில் மொத்தம் 29 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் போதுமானது.
புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்க முடியும். இதன்மூலம் சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலத்தை உயர்த்தி கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும், முதல்வர் ரங்கசாமி கவர்னரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும், இதுவரை நியமன எம்.எல்.ஏ.க்க்ள நியமிக்க அனுமதி கிடைக்கவில்லை.
சட்டசபையில் தற்போது தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் உள்ளார். நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பில் வேட்பாளர் யார்? என்பது முடிவாகவில்லை. எதிர்கட்சிகள் ஒரு வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில் சபாநாயகர் தேர்தலில் பல பரீட்சை ஏற்படும். இத்தகைய தொடர் பிரச்சினைகளால் புதுவை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.