ஹஜ் யாத்திரிகர்களுக்கு கூடுதல் சலுகைகள்: எஸ்.எம். கிருஷ்ணா அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு மேலும் சில சலுகைகளை அளித்துள்ளது. இதை நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளுடன் துணைக்கு ஒருவர் செல்லலாம். தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் தேர்வாகாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் சீட்டு குலுக்கல் இல்லாமலேயே தேர்வு செய்யப்படுவர். ஹஜ் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பயணிகளுக்கும் போலீஸ் சரிபார்ப்பு கூட இல்லாமல் 8 மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
யாத்திரைக்குத் தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் நடைமுறை எளிதாக்கப்படும். இந்தியாவில் மொத்தம் 21 ஊர்களில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு விமானம் மூலம் நேரடியாகச் செல்லலாம். யாத்திரையின் போது இந்திய யாத்ரீகர்கள் தங்குவதற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படும்.
ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு உதவ தனிப்பிரிவு அமைக்கப்படும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 671 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.