பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!
தமிழகத்தை வாட்டி வதைக்கிறது மின்வெட்டு. தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு தமிழக மின்வாரியத்திற்கு 7,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கிறது. பற்றாக்குறையை போக்க, தனியார் காற்றாலைகளிலிருந்து 2,500 மெகாவாட் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. தனியார் அனல்மின் நிலையங்களிலிருந்து, 700 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இன்னும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறையாக உள்ளது.
எனவே கூடுதலாக, 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வர தாமதமாகும் என்பதால், தனியாரிடமிருந்து, 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வாங்க, தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, ஒரிசாவை சேர்ந்த மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க, கடந்த வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்னும் கூடுதாக 450 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை, இந்த 450 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்ய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள், வரும் ஆகஸ்ட் 24 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு அறிவித்துள்ளது.