தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை
சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, தேனி, கோவை, சேலம் உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த மழை அளவு குறைந்து வெயில் கடுமையாக இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக வெப்ப நிலை பெருமளவில் குறைந்து விட்டது. மாறாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று சரியான மழை பெய்தது. நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மாலையில் தொடங்கி இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது.
மழையுடன் காற்றும் பலமாக வீசியதால் வெப்பத்தால் ஏற்பட்ட புழுக்கம் குறைந்து குளுமை குடியேறியது.
தமிழகத்தில் அதிக அளவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வால்பாறையில்20, கன்னியாகுமரி, தென்காசியில் தலா 10 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு:
குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ச்சைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.