ப.சிதம்பரம் மீது குறை கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஐ.என்.டி.யு.சி.
நெய்வேலி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குறை கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. தெரிவித்துள்ளது.
இது குறித்து நெய்வேலி ஐ.என்.டி.யு.சி. ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் தொழிற்சங்க கெளரவ தலைவர் குள்ளப்பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்துள்ள மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தவறாக பேசியுள்ளார்.
1984-ம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும், பின்பு 1991-ம் ஆண்டு வர்த்தகத் துறை தனி இலாகா பொறுப்பினை ஏற்று தனது நிர்வாக திறமையால் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளைப் பெற்றார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது தவறானது என தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.
அவரது நிர்வாகத் திறமை, பொருளாதார சிந்தனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து வருகின்றது.
தற்போது ஏழை, எளிய மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்துவேன் என்று கூறி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது மத்திய அரசை நம்பித் தான்.
மத்திய அரசோடு சுமூகமான உறவு கொள்வேன் என அவர் பகிரங்கமாக கூறி வருவது மத்திய அரசின் நிதி ஆதாரத்தை பெறுவதற்காகத் தான்.
அப்படிப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் ப. சிதம்பரம் மீது ஜெயலலிதா குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக நெய்வேலி தொழிலாளர்கள் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.