காங். ஆதரவை நாட வேண்டிய நிலையில் ரங்கசாமி!-கண்டிசன் போட்டு கலங்கடிக்கும் சோனியா!!
புதுவை மாநிலத்தில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.கவும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக கூட்டணி 20 இடங்களைக் கைப்பற்றியது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏக்கள் போதும் என்ற நிலையில் அதிமுகவை கழற்றிவிட்டார் ரங்கசாமி. காரைக்காலில் வென்ற சுயேட்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் ரங்கசாமி தனித்தே ஆட்சியமைத்தார். இதனால் இனிமேல் அவருக்கு எக்காரணம் கொண்டு ஆதரவு கிடையாது என்று அதிமுக அறிவித்துவிட்டது.
கடந்த மே மாதம் 16ம் தேதி ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றார். 22 நாட்களுக்கு பின் கடந்த 8ம் தேதி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால், அவர்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை.
புதுவையில் முதல்வருடன் சேர்ந்து 6 அமைச்சர்கள் இருக்கலாம். இதனால் இன்னும் ஒரு அமைச்சர் பதவி காலியாகவே உள்ளது. மேலும் சபாநாயகரையும் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை ரங்கசாமி.
ரங்கசாமி தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் இந்திரா நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 14 ஆகக் குறைந்துள்ளது. அவர் மெஜாரிட்டியை நிரூபிக்கவே இன்னும் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு வேண்டும்.
அதே நேரத்தில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலமும் 14 ஆக உள்ளது. இதனால் சபாநாயகர் தேர்தலில் எதிர்க் கட்சிகள் கூட்டு சேர்ந்து, போட்டி ஏற்படும் பட்சத்தில் ரங்கசாமியின் ஆதரவாளரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க முடியாத நிலை உள்ளது.
இனிமேல் அதிமுகவிடம் போக முடியாது என்பதால் ஆட்சியில் தொடர தான் முன்பிருந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற ரங்கசாமி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்புடன் பேச்சு நடத்தி வரும் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கவும் அவர் தயாராகி வருகிறார்.
ஆனால், அவருடன் பேச்சு நடத்தி வரும் காங்கிரஸ் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி, ஒரு அமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் காங்கிரசிலிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை இன்னும் ஓராண்டுக்குள் காங்கிரசுடன் இணைய வேண்டும் என்றும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
இதனால் அதிர்ந்து போயுள்ளார் ரங்கசாமி. ஆதரவு கேட்பது குறித்துப் பேச ரங்கசாமி இன்று டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரங்கசாமி இன்று டெல்லி செல்லவில்லை. ஆனால், காங்கிரசின் நிபந்தனைகளைப் பார்த்து பயந்துவிட்ட ரங்கசாமி டெல்லி பயணத்தை ஒத்தி வைத்துவிட்டார்.