மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் கொண்டு வர முடிவு

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் சில கட்சிகள் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகின்றன. இதனால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ஏற முடியாத நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகியவை புறக்கணித்தன.
இக்கூட்டத்தில், மகளிர் மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல கட்சிகள் வலியுறுத்தின. இதனால் இன்றைய கூட்டத்தில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் தெரிவித்தார்.
கடந்த 14 வருடங்களாக இந்த மகளிர் மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். கடந்த தேவே கெளடா ஆட்சியின்போது 1996ம் ஆண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications