லோக்பால் மசோதா-சோனியாவை நாளை சந்திக்கிறார் அன்னா ஹஸாரே
லோக்பால் மசோதாவுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைத் தேடி வருகிறார் அன்னா ஹஸாரே. இதற்காக அத்வானி உள்ளிட்ட தலைவர்களை சமீபத்தில் சந்தித்தார் அவர். இந்த நிலையில் நாளை சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நாளை சோனியா காந்தியை சந்தித்து லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு திரட்டவுள்ளேன். எனது போராட்டத்தை கண்டித்த கட்சி காங்கிரஸ் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. ஜனநாயக முறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி சோனியா காந்தியை சந்திக்கிறேன்.
சோனியா காந்திக்கு நான் எழுதிய கடிதத்திற்கு அவர் அனுப்பிய பதில் கடிதம் கடுமையானதாக, அவதூறாக இருந்ததாக நான் கருதவில்லை. அது ஒரு மோசமான கடிதம் இல்லை.
லோக்பால் வரையறைக்குள் பிரதமர் பதவியை கொண்டு வருவது தொடர்பாக மன்மோகன் சிங் கவலைபப்படவில்லை. மாறாக அவரை கண்ட்ரோல் செய்து வரும் ரிமோட் கண்ட்ரோல்தான் பயப்படுகிறது.
எனக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அங்கு லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறன் என்றார் அன்னா.
தென்னக தலைவர்களை அன்னா சந்திக்காதது ஏன்?
அன்னா ஹஸாரேவும் சரி, அவருடன் சேர்ந்து ஊழலை ஒழிக்கப் போராடி வருபவர்களும் சரி வடக்கிலேயேதான் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். வட இந்தியத் தலைவர்களை மட்டுமே பார்க்கின்றனர், பேசுகின்றனர். ஆனால் மரு்நதுக்குக் கூட தென்னகத்தின் பக்கம் அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை என்பது வியப்பாக உள்ளது.
தென்னகத்திலும் நெடிதுயர்ந்த, மூத்த அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என நிறையப் பேர் உள்ளனர் என்பது அன்னா ஹஸாரே குழுவினருக்குத் தெரியவில்லையா என்று புரியவில்லை. கர்நாடகத்தின் சந்தோஷ் ஹெக்டேவை மட்டுமே அவர்கள் தங்களுடன் வைத்துள்ளனர். மற்றபடி தென்னக மக்களின் கருத்தை அறியவோ, தென்னகத் தலைவர்களின் ஆதரவைப் பெறவோ அவர்கள் இதுவரை முயற்சி எடுக்காதது ஏன் என்பது புரியவில்லை.