ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுப. இளவரசன் திடீர் கைது
அரியலூர்: தமி்ழ்நாடு விடுதலைப் படை என்ற நக்சலைட் அமைப்பை நடத்தி வந்த சுப. இளவரசன் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பை நடத்தி வந்தவர் இளவரசன். பின்னர் கடந்த அதிமுக ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு விடுதலையான சுப. இளவரசன் தமிழர் நீதிக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கார் திருட்டு வழக்கில் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ஓசூரில் ஒரு கார் காணாமல் போனது. பின்னர் இந்தக் கார் சென்னையில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தக் காரை இளவரசனுடைய ஆட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இளவரசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று ஜெயங்கொண்டம் விரைந்து வந்தனர். இளவரசனின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இளவரசனின் மனைவி கவிதா கூறுகையில், எந்த வழக்கில் கைது செய்கிறார்கள் என்பதை போலீஸார் என்னிடம் சொல்லவில்லை. எனது கணவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.