லோக்பால் மசோதா லோக்சபாவில் தாக்கல்- பிரதமர் பதவியை சேர்க்க பாஜக கோரிக்கை
டெல்லி: சர்ச்சைக்குரிய லோக்பால் மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யபப்பட்டது. பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி மசோதாவைத் தாக்கல் செய்தார்.
மசோதாவை அமைச்சர் தாக்கல் செய்ததும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சில ஆட்சேபனைகளை எழுப்பிப் பேசினார்.
அவர் கூறுகையில், லோக்பால் மசோதாவில் இடம் பெற்றுள்ள பல ஷரத்துகள் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளன. குறிப்பாக பிரதமர் பதவியை இந்த வரையறைக்குள் கொண்டு வராமல் இருப்பது தவறானது. பிரதமர் பதவியையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும். மேலும், பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வராமல் விலக்கு அளித்திருப்பது அரசியல் சட்டத்திற்குப் புறம்பானதாகும். இந்திய சட்டப்படி இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம்.
எனவே பிரதமர் பதவியை லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிப்போம். இப்போதைய வடிவில் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாராயணசாமி, உறுப்பினர்கள் கூறும் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருந்தால் அவை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.