ஆக. 14ம் தேதி வரை கே.என்.நேருவைக் கைது செய்ய தடை
நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், திருச்சியில் உள்ள ஹோட்டல் காஞ்சனா தனக்குச் சொந்தமானது. ஆனால் அந்த ஹோட்டலை விட்டு என்னை வெளியேற்றி சிலர் பறித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் கே.என்.நேருவின் தூண்டுதலின்பேரிலேயே ஹோட்டலைப் பறித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், சங்கர நாராயன், குமார், ரங்கநாதன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாலா, 14ம் தேதி வரை மனுதாரர்களைக் கைது செய்ய போலீஸாருக்குத் தடை விதித்தார். அன்றைக்குள் விளக்க பதிலைத் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கும் உத்தரவிட்டார்.