லெனின் கருப்பன் வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை
ஓசூர்: நித்யானந்தாவின் முன்னாள் ஓட்டுனரும், சீடருமான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் மிக நெருக்கமாக உள்ள கிளுகிளு படுக்கை அறைக் காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என்றும், பெண்களை அவமானப்படுத்தும் வகையில் இக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனாலும், இந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சியில் திட்டமிட்டு ஒளிபரப்பியதாக நடிகை ரஞ்சிதா குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், தன்னை லெனின் கருப்பன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடிகை ரஞ்சிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, லெனின் கருப்பனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் முறையிட்டார்.
இதன் பேரில், லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.