இலங்கையில் 150 முன்னாள் விடுதலைப் புலிகள் நாளை மறுதினம் விடுதலை!
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது சுமார் 11,700 விடுதலைப் புலிகள் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு கைத் தொழில்கள் கற்றுத் தரப்பட்டு மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறி வந்தது.
இவர்களை முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு கூறுகிறது.
இந் நிலையில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேர் பயிற்சிகளை முடித்துவிட்டதாகவும், அவர்களை வரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ராணுவ மறுவாழ்வுப் பிரிவுக்கான மேஜர் ஜெனரல் சுதந்தா ரணசிங்கே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் அமலில் உள்ள அவசரகால சட்டங்களைத் ( emergency laws) திரும்பப் பெற அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இத் தகவலை பிரதமர் ஜெயரத்னே, அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.