கைது நடவடிக்கைக்குப் பயந்து மு.க.அழகிரி மனைவி காந்தி டெல்லியிலேயே முகாம்

மதுரை அருகே உத்தங்குடியில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி அழகிரியின் பெயரில் தற்போது நிலம் இல்லை என்றும் வேறு ஒருவருக்கு அவர் பவர் கொடுத்துள்ளதாகவும், இதனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு காந்தியைக் கைது செய்ய முடியாது என்று சட்ட நிபுணர்கள் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதனால் காந்தி அழகிரியைக் கைது செய்வதை போலீஸார் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் காந்தி அழகிரிக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் புகார் கிளம்பியதுமே மு.க.அழகிரியுடன் டெல்லிக்குப் போய் விட்டார் காந்தி. தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார். கைது நடவடிக்கைக்குப் பயந்தே அவர் டெல்லியில் தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த மு.க.அழகிரியின் கூட்டாளிகள் பலரும் குறிப்பாக பொட்டு சுரேஷ், தளபதி, அட்டாக் பாண்டி என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகிரி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். முதலில் காந்தி அழகிரியைக் கைது செய்து விட்டு இறுதியாக அழகிரி பக்கம் காவல்துறையின் பார்வை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து மதுரையி்ல பரபரப்பு நிலவுகிறது.
காந்தி அழகிரியை டெல்லியிலும் தமிழக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதற்காக சிபிசிஐடி போலீஸ் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. அழகிரி வீடு அமைந்துள்ள காமராஜ் மார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த மத்திய போலீஸ் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் தமிழக போலீஸார் என்று தெரிய வந்தது.
ஆகஸ்ட் 8ம் தேதி திஹார் சிறைக்குச் சென்ற காந்தி அழகிரி அங்கு கனிமொழியை சந்தித்துப் பேசினார். அதுகுறித்த தகவலை திஹார் சிறையில் உள்ள தமிழக ஆயுதப் படை போலீஸார் சென்னைக்குத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கோவில் நிலத்தை காந்தி அழகிரிக்குக் கொடுத்தவராக கூறப்படும் லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதையடுத்து அடுத்து காந்தி அழகிரிதான் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications