பதவிப்பிரமாண உறுதியை மீறி நடந்த அமைச்சர் புத்திசந்திரனை டிஸ்மிஸ் செய்யக் கோரி வழக்கு

ஊட்டி நகராட்சி திமுக கவுன்சிலர் முஸ்தபா என்பவர் இதைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
அ.தி.மு.க.வை சேர்ந்த ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. புத்திசந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர், ஊட்டி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், பொட்டானிக்கல் கார்டன் ஆகிய இடங்களில் தனக்கு வேண்டியவர்களுக்கு ஆவின் பால் பூத் உரிமம் வழங்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது அவர் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்துக்கு எதிரானது.
அமைச்சரின் உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தினார். இதனால் ஏற்கெனவே ஆவின் பால் பூத் நடத்தி வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர் நடுநிலை தவறி செயல்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மலைப்பகுதி பாதுகாப்பு சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊட்டியில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், மாவட்ட வனத்துறை அதிகாரி, தாசில்தார், வேளாண் செயற்பொறியாளர் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர். ஊட்டியில் உள்ள மரங்களை வெட்டுவது, மண் வளப்பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவது இந்தக் குழுவின் பணியாகும்.
ஆனால், புத்திசந்திரன் பதவி ஏற்றவுடன், தன்னுடை அனுமதி இல்லாமல், ஊட்டியில் பட்டுபோன மரங்களையோ, சில்வர் ஓக் மரம் உள்ளிட்ட மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதி வழங்க கூடாது என்று இந்த கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கீழ் குந்தா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராக புத்திசந்திரனின் மனைவி பதவி வகித்தார். அப்போது அந்த பஞ்சாயத்தில் ஒப்பந்த பணிகளை புத்திசந்திரன் செய்தார். மனைவி கவுன்சிலராக இருக்கும்போது, கணவர் ஒப்பந்தப்பணி செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறியதால், அவருக்கு வழங்கவேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ. 3 லட்சத்தை அமைச்சரானதும், பதவியை பயன்படுத்தி பெற்றுள்ளார்.
அமைச்சரின் இந்த 3 விதமான விதிமுறை மீறிய செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர், தன்னுடைய பதவி பிரமாண, ரகசிகாப்பு உறுதிமொழிகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் எந்த அடிப்படையில் அமைச்சர் பதவியை தொடர்கிறார் என்று விளக்கம் கேட்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் முஸ்தபா.
இந்த மனு விசாரணைக்குத் தகுந்ததா என்பதா முடிவு செய்து தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து
இதற்கிடையே அமைச்சர் புத்திசந்திரன் தனது திருமண நாளையொட்டி தனது மனைவி மற்றும் மகள்களுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.












Click it and Unblock the Notifications